முதல்வருக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து மருந்துவமனைக்கு வந்த பெண் படுகாயம்: எப்போது ஒழியும் இந்த பேனர் கலாச்சாரம்?

Author: Rajesh
31 March 2022, 12:36 pm
Quick Share

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வைத்திருந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி கண்டறியும் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், முதலமைச்சரை வரவேற்க பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஓமந்தூரார் மருத்துவமனை வாயிலில் மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்து.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீரென சரிந்து விழுந்ததில் அந்தப் பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் தனது கணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைக்குச் சென்றபோது பேனர் மேலே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், பேனர் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை. இதனால் பலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Views: - 684

0

0