இது புது டெக்னிக்கா இருக்குமோ: ஸ்டாலின் புகைப்படம் ஒருபுறம்..குக்கர் சின்னம் மறுபுறம்…அமமுக வேட்பாளரின் போஸ்டரால் சலசலப்பு..!!
Author: Aarthi Sivakumar30 September 2021, 9:19 am
தென்காசி: கடையம் ஒன்றியத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரில் ‘தமிழக முதல்வர் நல் ஆசியுடன்’ என்ற வாசகத்துடன் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அம்மாவட்ட அமமுக செயலாளர் சந்திரசேகர் என்பவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சார போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், சந்திரசேகருக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள பிரச்சார போஸ்ட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக முதல்வரின் ஆசியுடன், கடையம் ஒன்றியத்தில் 13 வது வார்டில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சந்திரசேகர், வாராரு வெளிச்சம் தரப் போறாரு ஆதரிப்பீர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் தன்னை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சந்திரசேகர் தனது வார்டில் ஒட்டியுள்ள போஸ்டரில் ஸ்டாலின் மற்றும் சந்திரசேகரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆனால், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் படமோ அல்லது அ.தி.மு.க தலைவர்கள் படமோ அதில் யாருடைய படமும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து, வேட்பாளர் சந்திரசேகர் கூறுகையில், தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவானவர். நான் அமமுக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஸ்டாலினின் படத்தை எனது கவுன்சிலர் அலுவலகத்தில் வைக்க வேண்டும். அவருடைய நிர்வாகத்தின் கீழ் நான் வேலை செய்ய வேண்டும். எனவே, இது தவறு என்று நான் நினைக்கவில்லை. தி.மு.கவினர் கூட என்னை ஆதரிக்கிறார்கள். ஏனெனில், அவர்களின் வேட்பாளர் ஜெயக்குமார் முன்பு புதிய தமிழகம் கட்சியில் இருந்தபோது ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தார் என்று கூறியுள்ளார்.
தென்காசி, கடையம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் சந்திரசேகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பயன்படுத்தியிருப்பது நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
0
0