ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி இருளர் இன பெண்ணின் 6 மாத குழந்தை கடத்தல்… சிக்கிய சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2025, 1:08 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த மோட்டூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஈஸ்வரி வயது 24 இருளர் இன பெண்ணான இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற நபருக்கும் திருமணம் நடந்து இருவரும் அங்குள்ள நிலமங்கள என்ற பகுதியில் தனியார் செங்கல் சூலையில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்களுக்கு ஆறு மாதத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரி தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளார்.
இங்குள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அடிவாரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ள தனது தந்தை கோபி மற்றும் உறவினர் குடும்பத்தாருடன் சேர்ந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சுமார் 35 வயதுமிக்க பெண் ஒருவர் ஈஸ்வரியை நோட்டமிட்டு அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தமக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதன்படி தோஷம் தீர ஏழை பெண் குழந்தைகளுக்கு துணிகள் வாங்கி கொடுக்க ஜோதிடர் தெரிவித்ததாக கூறி ஈஸ்வரி மற்றும் அவரது ஆறு மாத பச்சிளம் குழந்தையை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி ரவுண்டான அருகே உள்ள துணி கடைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று அங்கு குழந்தைக்கு புதிய துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்கி கொடுத்து உளளார்.,
பின்னர் அதே பகுதிக்கு அவர்களை அழைத்து வந்து விட்டுச் சென்ற அந்த பெண் மாலை 6:00 மணிக்கு மீண்டும் அங்கு வந்து ஈஸ்வரியிடம் உனது குழந்தை மிகவும் அழகாக உள்ளது எனவும் குழந்தையுடன் செல்பி போட்டோ எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கலைஞர் சிலை பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையை கொண்டு சென்றுவிட்டு வருவதாக தெரிவித்த அந்தப் பெண் ஈஸ்வரி அசந்த நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் அந்தப் பெண் மாயமாகினார்.
நீண்ட நேரம் கோயிலுக்கு அருகில் காத்திருந்த ஈஸ்வரி குழந்தையுடன் சென்ற பெண்ணை காணவில்லை என தேடிய போது தான் தனது குழந்தை கடத்தப்பட்டுள்ளது என்பதை ஈஸ்வரி அறிந்தார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரி அழுது புலம்பியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரிக்கும் பொழுது பெண் ஒருவர் தனது குழந்தையை கடத்திச் சென்றது குறித்து தெரிவித்தார்.,
இதுகுறித்து ஈஸ்வரி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
