சிமெண்ட் லாரி கவிழ்ந்து 3 பேர் உடல் நசுங்கி பலி : வளைவில் திரும்பும் போது பாரம் தாங்காமல் நேர்ந்த விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 3:24 pm
Lorry Upset Dead -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரீட் தளம் அமைக்க சிமெண்ட் கலவை பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நஞ்சப்ப கவுண்டன்புதூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையின் வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் லாரியில் பயணித்த பவானிசாகர் காராட்சிகொரை பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய மூவரும் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் இரண்டு பொக்லின் வாகனங்களை வரவழைத்து அதன் மூலம் லாரியின் அடியில் சிக்கி இருந்த மூன்று பேரின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே வாகனத்தில் வந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1610

0

0