தேசபக்தி கொண்டவர்கள் வீடுகளில் தேசியகொடி ஏற்றுகின்றனர்… 2047ல் கலாமின் கனவு நனவாகும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 9:53 am
Quick Share

கோவை : நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தேசபக்தி உள்ள அனைவரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் சுதந்திர ஓட்டம் நிகழ்வு நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கப்பட்டது. தேசியக் கொடியை அனைவரும் கையில் தூக்கிப்பிடித்தபடி மத்திய இணை அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்த சுதந்திர ஒட்டம் கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து லட்சுமி மில் உட்பட முக்கிய சாலைகளின் வழியாக 7.2 கி.மீ தூரம் சென்று மீண்டும் இந்துஸ்தான் கல்லூரியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது சுதந்திர அமுத பெருவிழா கொண்டாட்டமாக தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பாரதப் பிரதமர் அவர்கள் இல்லம் தோறும் தேசியக்கொடி எனும் 13-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த 10 நாட்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

இன்று கோவையில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவு கொள்ளும் விதமாகவும், நமது தேசியக் கொடியின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும், இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பிரதமர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மலை கிராமங்களில் உள்ள மக்களும் தாமாக முன்வந்து இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். தமிழக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ்நாடு பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மாநிலம். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, பாரதியார் போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளனர். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் அவர்களின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இவர்களை தவிர அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களும் பலர் உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தியாகிகளின் வாரிசுகள் மரியாதை செய்யப்பட்டு வருகின்றனர். தேசபக்தி உள்ள அனைவரும் அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா செயல்பட்டு வருகிறது. 2047 ஆம் ஆண்டில் அப்துல் கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா வல்லரசு நாடாக மாறும்’ என தெரிவித்தார்.

இந்நிகழ்வினை அடுத்து இன்று பிற்பகல் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் முருகன் பங்கேற்க உள்ளார்.

Views: - 448

0

0