மக்களை சுட்டெரிக்கும் வெயில்…வெப்பத்தை தணிக்கும் கோடை மழைக்கு வாய்ப்பு: உங்க மாவட்டத்துல என்ன நிலவரம் இதோ..!!

Author: Rajesh
8 April 2022, 2:05 pm

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 11 மற்றும் 12ம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா 3 செண்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, ஆர்.எஸ். மங்கலம், வட்டானம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  • dhanush kuberaa movie first day collection report எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!