காவலர் தாக்கியதால் பெயிண்டர் தீக்குளிப்பு! பரபரப்பு மரண வாக்குமூலம்.!!
3 August 2020, 10:35 amசென்னை : புழல் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து தீக்குளித்து பெயிண்டர் சீனிவாசன் உயிரிழந்ததையடுத்து ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெரு சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர் வீடுகளை வாடகைக்கு விட்டு வருகிறார். இதில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார்.
இவர் வாடகை இருக்கும் வீட்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டதாக வழக்கொன்றில் கைது செய்யப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் மற்ற வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளதாக வீட்டு உரிமையாளர் ராஜேந்திரனுக்கு புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் சீனிவாசனை கடந்த ஜனவரி மாதம் வீட்டை காலி செய்யுமாறு கூறியும் வீட்டை காலி செய்ய சீனிவாசன் மறுத்ததால் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி புகார் கொடுத்தார்.
இந்நிலையில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண்சாம் நேற்று மதியம் சம்பவ இடத்தில் வந்து சீனிவாசனிடம் விசாரித்து நாளை காவல்நிலையம் வாருங்கள் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில் காவல்துறையினர் தாக்கியதாக தெரிவித்ததைத் தொடர்ந்து புழல் காவல் ஆய்வாளர் பென்ஷாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவலர்கள் நடத்திய விசாரணையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து,காவலர் தாக்கியதால் ஒருவர் தற்கொலையும் செய்தார். தற்போது சென்னையில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.