காலி இடத்தை குத்தகைக்கு விடுவதில் ரூ.50 லட்சம் மோசடி… பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் : மூவர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
2 June 2023, 12:48 pm
Quick Share

கோவை ; பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக பெண் பிரமுகர் உள்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ். புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன் என்பவர் மனைவி அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம் கடந்த 2021ஆம் ஆண்டு கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். அங்கு மாட்டு பண்ணை வைப்பதற்கு ரூ.60 லட்சம் செலவாகும் என்று அபிநயா கூறியுள்ளார்.

அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாராளமாக மாட்டு பண்ணை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இந்த மாட்டு பண்ணைக்கு மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் எனவும், அட்வான்ஸ் தொகையாக ரூ.3 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவ்வாறாக 3 மாத காலமாக வாடகையை பெற்று கொண்டிருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் மீண்டும் இந்த இடத்திற்கு வாடகை வேண்டாம் என அவர்களுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி, குத்தகையாக மாற்றிக் கொள்ளலாம் என பத்து வருடத்திற்கு பேசி முடிவு செய்தனர்.

தொடர்ந்து, மணிகண்டன் மற்றும் பாரதி வங்கிக்கணக்குகளிலும் ரூ.21 லட்சத்து 50 ஆயிரமும், பணமாக ரூ.30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபிநயா கொடுத்தார். இதற்கிடையில் அந்த வளாகத்தில் மாட்டுப்பண்ணையை ஆரம்பித்து 20 மாடுகளும், பால்விற்பனைக் கடை என கட்டுமான பணிகளை 65 லட்ச ரூபாய்க்கு மேற்கொண்டனர். ஆனால், மணிகண்டன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்ய மறுத்து காலதாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக மாட்டு பண்ணை நடத்தி வந்த நிலையில், திடீரென சில பேர் கடந்த மாட்டு பண்ணையை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். வீரகேரளத்தை சேர்ந்த நிர்மலா, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பாலசிங்கம், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகியோர் போன் மூலமும் நேரிலும் வந்து பால்பண்ணை உரிமையாளர் அபிநயாவை மிரட்டினர்.

தொடர்ந்து ஆர்எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் அபிநயா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலசிங்கம், வீர கேரளம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 342

0

0