நீதிபதி முன் தற்கொலை செய்ய முயன்ற தம்பதி : பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 6:17 pm
Couple Suicide Attempt - Updatenews360
Quick Share

திருப்பூர் அருகே நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவி பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அணுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரேடியேட்டர் கம்பெனியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டரை திருடியதாக மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது 29) என்பவரை காமநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

45 நாட்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்தார்.

இதனால் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கருப்புசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராக கருப்புசாமி வந்திருந்தார்.

வாரண்ட் ரீ கால் ஆகாமல் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கருப்புசாமி தனது மனைவி கையில் வைத்திருந்த பிளேடை பிடுங்கி தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

இதனை கண்ட அவரது மனைவியும் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனை கண்ட காவலர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவி தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 707

0

0