சுங்கச்சாவடி பேச்சுவார்த்தை தோல்வி.. வணிகர்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பிய அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 3:52 pm

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியினை அகற்றக் கோரி திருமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்
போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினருடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு நேற்றைய தினம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் எம் சாந்தி மற்றும் NHAI அதிகாரிகள் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகளின் படி வாகனங்களுக்கு கட்டண விளக்கு அளிக்கப்பட்டதோ அதன்படி அந்த நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மேலும் திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து அங்கிருந்து இலவசமாக செல்லலாம் என தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத திருமங்கலம் பகுதி வணிகர்கள், அனுமதி இல்லாமல் இங்கு அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் இருந்தன என தெரிவிக்கும்படியும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ கடிதம் கொடுக்கும்படி கூறினார்.

அது தலைமை இடத்தில் பேசி வாங்கப்படும் என அமைச்சர் கூறியதையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வணிகர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, சுங்கச்சாவடி தொடர்பான நடைபெற்ற பேச்சு வார்த்தை 100% சதவிகிதம் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே 2020 முதல் 23 வரை செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, அது செலுத்த தேவையில்லை என தெரிவித்த அமைச்சர், 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் உள்ளன என கேள்விக்கு, அதெல்லாம் இருக்கு இருக்கு என கூறியபடியே கிளம்பினார்.

மேலும் திருமங்கலம் பகுதி மக்களுக்கு கட்டண விளக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு உள்ளதா என கேள்விக்கு, அதெல்லாம் தலைமையில பேசிட்டு இருக்காங்க அது ரிட்டனா முடிவாகிடும் என தெரிவித்து விட்டு சென்றார்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வணிகள் கொடுத்த பேட்டியின்போது, 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி திருமங்கலம் பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து செல்லலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன அதை தெரிவிக்கும்படி கூறினால், அதை தெரிவிக்க மறுக்கிறார். எங்களின் கோரிக்கையை இந்த சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதே, ஆகையால் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை நடைபெறவிருக்கும் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெறவிருக்கும் போராட்டம் நடைபெறும் என்றும், இன்று நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை, நாளை போராட்டம் தொடரும் என பேட்டியில் தெரிவித்தனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…