அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!

Author: Hariharasudhan
3 February 2025, 1:07 pm

திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினத்தையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பீகார் மாநில பட்ஜெட்டாக இருக்கிறது. பீகாரில் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்துக்காக அம்மாநிலத்துக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayakumar on Union Budget 2025

அதிகம் பேர் பயணிக்கக் கூடிய ரயில்வே துறை குறித்து எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

இதையும் படிங்க: தவறைச் சுட்டிக்காட்டியதால் கொலை முயற்சியா? ஏடிஜிபி புகார்.. இபிஎஸ் கடும் கண்டனம்!

இரண்டு மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களுக்கு பட்ஜெட்டால் பயனில்லை. திருக்குறள் வாசிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை. அண்ணா கூறியதுபோலவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போலத்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!