அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க திமுக முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 4:27 pm

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க திமுக முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சந்தித்தனர்.

அப்போது பல்வேறு பிரச்சனைகளு தீர்வு காண்பது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பங்கீடு செய்து என் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் நடைபெறவில்லை எனவும் அதிமுக காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் எனவும் கூறினார்.

சிறுவாணி தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார். பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் முன்கூட்டிய காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு தரவில்லை எனவும் கூறினார்.

மேலும் கனிமவளக் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது எனவும் ஊருக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெரும்பாலான சாலைகள் குண்டும் குழிகளாகவும் உள்ளது என தெரிவித்த அவர் அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் கோவையில் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து, (தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அவிநாசி, சுல்தான்பேட்டை, சூலூர்) அத்திக்கடவு அவிநாசி திட்டம் II செயல்படுத்தப்பட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கோவை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருகிறது எனவும் குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு குற்றச்சாட்டு குறிப்பானைகளை வழங்கி Section 205யை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்களை பறிக்கின்றனர் எனவும் இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!