தேசியக்கொடியுடன் திமுக கொடி… திமுக பிரமுகரின் அராஜகத்தால் வீதியில் போராடிய குடும்பம்.. பரபரத்த கோவை ஆட்சியர் அலுவலகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 1:28 pm
DMK
Quick Share

தேசியக்கொடியுடன் திமுக கொடி… திமுக பிரமுகரின் அராஜகம் : வீதியில் போராடிய குடும்பம்.. பரபரத்த கோவை ஆட்சியர் அலுவலகம்!!

ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் எட்டரை ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அந்த இடத்தை தனக்கு தெரியாமல் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கு தனது உறவினர்கள் விற்று விட்டதாகவும் தனக்கு பங்கு தரவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டு மனு அளித்திருந்தார்.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவரது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.

அப்போது அப்பெண் அவரது தலையில் தேசிய கொடியை கட்டிக்கொண்டும் அவரது உறவினர்கள் திமுக கொடியை கட்டிக்கொண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய போதும் அவர்கள் சாலை மறியலை கைவிடாததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து அப்பெண் கூறுகையில் தாங்களும் திமுக கட்சியை சேர்ந்தவர்தான் எனவும் தனக்குத் தெரியாமலேயே திமுக பிரமுகர் தனது நிலத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களே ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் சாடினார்.

Views: - 143

0

0