கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

Author: Hariharasudhan
9 March 2025, 1:52 pm

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 9) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதன்படி, அமைப்பு ரீதியிலான 82 மாவட்டச் செயலாளர்கள் உள்பட தலைமை நிர்வாகிகளுடன், இபிஎஸ் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்துகொண்டே காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் இருந்தபடியே கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் பூத் கமிட்டியை விரைவாக அமைத்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தியாகத் தெரிகிறது.

மேலும், மாவட்டச் செயலாளர்களிடம் அவர்களுடைய மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை, கோவை மாவட்டச் செயலாளரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ‘அம்மா’ என்ற புத்தகத்தைக் கொடுத்து வரவேற்றார்.

EPS

இந்தக் கூட்டத்தில், “பூத் கமிட்டி மிகவும் முக்கியமான ஒன்று, எனவே அதனை விரைந்து அமைக்க வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். திண்ணை பிரச்சாரத்தை கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும்” என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பேரையே நான் சொல்லல.. கூட்டணி குறித்து அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். கூட்டணியைக் கேட்டால் தலைமை முடிவெடுக்கும் என கூறுங்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!