எல்லாமே பொய் வழக்கு.. எங்களை ஒண்ணும் செய்ய முடியாது : விஜயபாஸ்கரை சந்தித்த சி.வி. சண்முகம் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 1:39 pm

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள விஜயபாஸ்கரை அதிமுக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது அதை தடுப்பதற்கு துப்பு இல்லாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம். ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார். அது எப்போதும் நடக்காது.

இன்றைக்கு முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது விரைவில் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என்று நிரூபித்து அவர் விரைவில் வெளியே வருவார். தமிழகத்தில் சட்டம் இருந்து சந்தி சிரிக்கிறது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது ஜெயில் வளாகத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தனவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகரன், மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!