காவல் கண்காணிப்பாளர் ஆபிஸ் முன்பு பிரபல ரவுடி வெட்டிக்கொலை…. மர்ம கும்பல் வெறிச்செயல்.. போலீசார் விசாரணை…!

Author: Babu Lakshmanan
26 May 2022, 2:12 pm
Quick Share

புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் (எ) பொடிமாஸ் (23). இவர் கடந்த மூன்று தினங்களாக அரியாங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் உள்ள தெற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கி இருந்தார். இவரை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் இன்று அதிகாலை பொடிமாஸ் தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டி உள்ளனர்.

வீட்டில் இருந்த அவரின் மாமா கதவை திறந்த உடன், அவரை கத்தி முனையில் மிரட்டி அமர வைத்து பொடிமாஸை கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர்.

இது குறித்து பொடிமாஸின் மாமா அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் என்ன..? யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட பொடிமாஸ் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 886

0

0