காருக்குள் விளையாடிய போது கதவு பூட்டிக்கொண்டதால் விபரீதம் : மூச்சு திணறி 4 குழந்தைகள் பலி!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2025, 9:22 am
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில், கார் கதவு பூட்டிக் கொண்டதால், நான்கு சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
உள்ளூர் மக்களின் தகவலின்படி, உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மனஸ்வி (6) ஆகிய சிறுவர்கள் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றனர்.
இதையும் படியுங்க: விஜய்யை வைத்து தயவுசெய்து படம் எடுக்காதீங்க- தயாரிப்பாளரின் காதில் ஓதிய பிரபலம்! இதான் காரணமா?
நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, மகளிர் மன்ற அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, சிறுவர்கள் வேடிக்கையாக காருக்குள் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது, தானியங்கி கதவு பூட்டு இயங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் தகவல் அளித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர். சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதில் சாருமதி மற்றும் சரிஷ்மா சகோதரிகள் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவுகிறது, மேலும் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.