ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக தண்டோரா…பொருள்கள் வாங்கினால் ரூ.500 அபராதம்: மளிகைக்கடைக்காரர் போலீசில் புகார்..!!
Author: Aarthi Sivakumar25 January 2022, 6:21 pm
தர்மபுரி: கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தருமபுரி மாம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விஜயகுமார் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக ஊர் தர்மகர்த்தா ராஜசேகர், ஊர்கவுண்டர் தவுரிசெல்வம் உள்ளிட்டோர் கட்டப் பஞ்சாயத்து செய்து, விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விஜயகுமார் நடத்தி வரும் மளிகை கடையில் யாரும் பொருட்கள் வாங்க கூடாது எனவும், மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தண்டோரா போடப்பட்டதாக தெரிகிறது. கோயில் போன்ற பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதித்துள்ளதாகவும் விஜயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தம்மை ஊரைவிட்டுத் தள்ளிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். தேர்தலில் ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தியதை தாம் ஏற்க மறுத்ததால், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
0
0