போலீசார் முன்னிலையில் கடைக்காரருக்கு கத்திக்குத்து.. கடையை இடித்து தள்ள முயன்ற சம்பவத்தால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 9:01 pm
Quick Share

கன்னியாகுமரி அருகே பழக்கடைக்காரரை இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்து போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி சென்ற நபர்களால் பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்டம் களியல் பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவர் அந்த பகுதியில் உள்ள சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், டாரஸ் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கடையை இடித்து தள்ளி கடைக்குள் ஜல்லிகளை தட்டி செல்ல முயன்றுள்ளனர்.

இதனை கடையின் எதிர்புறம் வாடகை வீட்டில் வசிக்கும் கடை ஊழியர் கண்டு செல்வனுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அலறி அடித்து கொண்டு ஓடி வந்த செல்வன், கடையை திறந்து லைட்டுகளை எரியவிட்டு பார்த்தபோது, கடையின் வெளியே நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த கமலைய்யன் (65)அஜின் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் சேர்ந்து கடைக்குள் புகுந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர்.

இதனை அந்த பகுதியில் நின்றிருந்த போலீசார் வேடிக்கை பார்க்கவே, தாக்குதல் முடிந்த உடன் போலீஸ் அதிகாரி ஒருவர் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை விடுத்து, செல்வனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இதற்கு செல்வன் எதிர்ப்பு தெரிவிக்கவே, போலீசார் உட்பட தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் வெளியே வந்து நின்றுள்ளனர்.

கடை உரிமையாளருக்கு தாக்குதலின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இரத்தம் வழிந்த நிலையிலும், போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டுள்ள சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தாக்குதலுக்குள்ளான செல்வன் போலீசாரின் உதவியுடன் தான் தாக்குதல் நடந்து உள்ளதாக குற்றச்சாட்டுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 845

0

0