மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தா? விளாசும் காங்., எம்பி!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2025, 6:55 pm
திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அதிமுக – பாஜக தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு
காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்.
இந்திய அளவில் இந்தியா கூட்டணியை காங்கிரஸ் தலைமை தாங்குகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முழு தயாராக உள்ளோம்.
அமலாக்கத்துறை சோதனை என்பது வரும் தேர்தலில் அரசியலை பாதிக்குமா? என்பது குறித்த கேள்விக்கு, எந்த மாநிலத்திலும் மத்திய அரசு ஏஜென்சி மூலம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியலை பாதிக்காது.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை முடக்குவதற்காக பயன்படுத்தும் ஏஜென்சிகளாக தான் நான் பார்க்கிறேன் தவிர தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்த கேள்விக்கு, 234 தொகுதிகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் பொறுத்து அந்த நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.
துணை முதல்வர் பதவி உட்பட எதையும் முன்வைக்கவில்லை. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். சுமுகமாக தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பொறுத்து தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு கருத்து கூறுபவர்கள் பாகிஸ்தானிற்கு செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புரிந்து பேசுகிறாரா? இல்லை புரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினாலே அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தா? ஆப்ரேஷன் செந்தூர் நடந்ததுக்கு பின்பு அனைத்து இந்திய மக்களும் இந்திய ராணுவத்திற்கு பின்பே இருக்கிறோம்.
இந்திய ராணுவத்தையோ? இந்திய அரசையோ? குறை சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினார்கள் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும்.
பஹல்காம் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியாக, ராஜாங்க ரீதியாக, அழுத்தத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்.
மற்ற சம்பவத்தையும் இதையும் ஒப்பிட முடியாது. இது மத ரீதியாக பிரித்து மக்களை கொன்று உள்ளனர். பாகிஸ்தான் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும் வரை அழுத்தம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
