பைக் மீது உரசிய அரசுப்பேருந்து…பின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Rajesh
11 April 2022, 9:47 am
Quick Share

கோவை: சின்னியம்பாளையம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தர்மராஜ் (21). ஐடி ஊழியரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது ஆர்.ஜி. புதூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து தர்மராஜ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது. இதில், நிலை தடுமாறி விழுந்த தர்மராஜ் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அரசு பேருந்தை இயக்கி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ஓட்டுநர், சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி ஊழியர், அரசு பேருந்து விபத்தில் சிக்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளையும் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 841

0

0