கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்.. தவெகவுடன் கூட்டணியா? பிரேமலதா கொடுத்த பதில்!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2025, 2:10 pm
கரூரில் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை.
இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026 இல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும். 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டி காட்ட முடியும்.
கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.