நான் எம்எல்ஏ ஆன பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.. திமுக எம்எல்ஏ கலகல!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2025, 10:47 am
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்.
மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராம மக்கள் மத்தியில் எம்எல்ஏ மகாராஜன் கலகலப்பாக பேசினார்.
அவர் பேசும்போது, நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது.
இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. மக்களின் மனம் அறிந்து முதலமைச்சர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதில் ஒன்று மகளிர் விடியல் பயணதிட்டம். நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள்.
வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம்.
அதில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யப் போகிறீர்கள் உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின், எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்றார். கலகலப்பாக கிராமத்து பாணியில் நகைச்சுவையுடன் பேசிய எம்எல்ஏ மகாராஜனின் பேச்சை கிராமமக்கள் ரசித்து கேட்டனர்.