இது இரண்டாவது முறை… நீங்க கொடுத்த வெற்றி: தூத்துக்குடி மக்களிடம் மனம் திறந்து பேசிய கனிமொழி எம்பி!

Author: Vignesh
13 June 2024, 12:02 pm

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கத் தொடங்கினர்.

அப்போது அவர் பேசுகையில், உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவும் அதைப்போல தமிழகம் முதல்வர் அவர்களின் ஆட்சியின் மீது வைத்திருக்கும் பற்றின் காரணமாகவும், திமுகவிற்கு பெருவாரியான வாக்குகளை அளித்து என்னை இரண்டாவது முறையாக இந்த பகுதியில் பணியாற்றக்கூடிய வாய்ப்பாக, உங்களது பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பளித்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் தூத்துக்குடியின் முன்னேற்றத்திற்காக இங்கே பல்வேறு முதலீடுகள் கொண்டு வருவதற்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!