நைட் டைம்ல ரொமேன்ஸ் மெசேஜ் பண்ணி தொந்தரவு செய்வார் : இம்சை தாங்க முடியல… பேராசிரியர் மீது மாணவிகள் பகீர் புகார்!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 2:20 pm
Quick Share

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு வகுப்பறையில் பாலியல் தொல்லையும், நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பிய பேராசியரை, பணிநீக்கம் செய்ய கோரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகஸ்தீஸ்வரம் அருகே கலைக்கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் தாமரைக்குளத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விலங்கியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதே துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் நள்ளிரவு செல்போனில் தொடர்ந்து குறுந்தகவல் ஒன்றை அனுப்பியதாக தெரிகிறது.

இந்த குறுந்தகவலை அந்த மாணவி தங்கள் வீட்டிலுள்ள பெற்றோரிடம் காண்பித்துள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரர் பேராசிரியரை கல்லூரிக்குள் புகுந்து சம்பந்தப்பட்ட பேராசிரியரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் சகோதரனை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தால் கல்லூரி நிர்வாகம், புகார் செய்த மாணவியை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்தப் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய கோரி கல்லூரி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி மாணவி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ; எங்கள் கல்லூரியில் விலங்கியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் வாசுதேவ ராஜா என்ற பேராசிரியர் வகுப்பறையில் என்னையும் பலமுறை கால்களில் உரசுதல், தொடையில் தட்டுவது உள்ளிட்ட பல்வேறு தொல்லை கொடுத்து வந்தார். இதுபோல் பல மாணவிகளிடமும் செயல்படுவார்.

எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால்‌. இதுவும் பாடத்திற்கான விளக்கம் என கூறினார். இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளோம்.

ஆனால் கல்லூரி முதல்வர் அந்த பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இது போன்று கல்லூரி முதல்வரே பேராசிரியருக்கு ஆதரவாக செயல்படுவதால், எங்களுக்கு கல்லூரிக்கு வருவதற்கே பயமாக உள்ளது. மேலும் இந்த பேராசிரியர் மாணவிகளிடம் வீடியோ காலில் பேசி தொல்லை கொடுக்கிறார். அதேபோல் ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது என்னுடைய பர்சனல் நம்பருக்கு படிப்பு சாரந்த தகவல்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறுவார் .

துறை சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் அனுப்புவோம் என கூறினால் அவ்வாறு அனுப்பினால் உங்களுக்கு மார்க் போட மாட்டேன் எனவும் தெரிவிப்பார். இரவு நேரங்களில் ரொமான்ஸ் மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுப்பார், இவ்வாறு அந்த மாணவி தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா, மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பினும் மாணவ-மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் டிஎஸ்பி ராஜா மாணவிகளிடம் முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இரண்டாம் கட்டமாக டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவ-மாணவிகளிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து மாணவ மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி வகுப்பறையிலேயே பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களிடமும் ,பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1445

0

0