பட்டா மாறுதலுக்கு ரூ.17,000 லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர் ; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 9:35 pm
Quick Share

கரூர் ; குளித்தலை அருகே மாவத்தூரில் ரூ.17,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிதம்பரம் மகன் இளையராஜா வயது (45). இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து, தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இது குறித்து மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமார பாண்டியன் விவசாய நிலத்தினை அளவீடு செய்து பட்டா வழங்குவதற்கு ரூபாய் 17000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் 17,000 பணத்தினை அவரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற இளையராஜா, ரசாயனம் தடவிய ரூ. 17000 பணத்தினை கிராம நிர்வாக அலுவலர் குமார பாண்டியனிடம் அளிக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஸ்பி இமயவர்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Views: - 296

0

0