ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ்… பெட்ரோலை ஊற்றி போலீஸை கொளுத்த முயன்ற பெண் தாதா…சென்னையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 1:39 pm

சென்னை : சென்னையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, மண்ணெண்ணை ஊற்றி கொலை செய்து விடுவதாக பெண் தாதா மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைந்தகரை அண்ணா ஆர்ச் பகுதியை சேர்ந்த ஆர்ச் வினோத் எனப்படும் ரவுடி வினோத். சென்னையில் அதிக குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளில் ஒருவரான இவர் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதேபோல, ரவுடி வினோத்தின் தாயார் லதா (55), அங்கு பெண் தாதா ஆவார். அவர் மீதும் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நேற்று இரவு அமைந்தக்கரை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் 3 காவலர்கள் ரவுடி வினோத் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, போலீசாரை தள்ளிவிட்டு ரவுடி வினோத் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்டார். உடனே போலீஸார் வீட்டிற்குள் சென்று அவனை பிடிக்க முயன்றபோது, ரவுடி வினோத்தின் தாய் லதா, 4 காவலர்கள் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி கொண்டதுடன், உங்களை இங்கேயே கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதறிப்போன போலீஸார், உடனே அருகில் இருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மீதும் லதா மீதும் ஊற்றினர்.

பின்னர் போலீஸார் லதாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவிட்டு அவரிடம் எழுதி வாங்கி கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரவுடி வினோத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.

பெண் தாதா லதா போலீஸார் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விடுவேன் மிரட்டல் விடுத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!