விவசாயிகளை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.. இடப்பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் விபரீதம் ; திண்டுக்கல்லில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 1:55 pm
Quick Share

திண்டுக்கல் அருகே இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை வனப்பகுதியில் தனபால் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

தனபால் விற்பனை செய்த ஐந்து ஏக்கர் நிலம் அளவு கம்மியாக இருப்பதாக கூறி சித்திரைவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ராஜாகண்ணு என்ற இருவரும் தனபாலிடம் குறைவாக உள்ள இடத்திற்கு பணத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தனபால் தான் வைத்திருந்த பரலி துப்பாக்கியால் முதலில் கருப்பையாவை வயிறு மற்றும் தொடை பகுதியில் சுட்டுள்ளார்.கருப்பையாவை காப்பாற்ற முயன்ற ராஜாகண்ணுவிற்கும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் தனபால் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கிக்கு அனுமதி உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 333

0

0