காதலர் தின ஸ்பெஷல்… திருமணம் செய்த கையோடு போலீஸில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 2:01 pm
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் கோயிலில் திருமணம் முடித்த கையோடு, ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கொல்லங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வினோத்(32) என்ற இளைஞருக்கும், ரெகுநாதபுரம் அருகே உள்ள பந்துவாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த விசித்ரா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே நடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், ஜாதக பொருத்தம் இல்லாததால் இவர்களின் காதலுக்கு விசித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வினோத் மற்றும் விசித்திரா ஆகிய இருவரும் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடித்த கையோடு காதல் ஜோடிகள் நேராக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து, ஏற்கனவே விசித்திராவை காணவில்லை என அவரது பெற்றோர்கள் ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென அங்கேயே தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, காதல் ஜோடிகளின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளனர் என்றும், அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என கூறி காதல் ஜோடியை காவல் நிலையத்தில் இருந்து மணமகன் வினோத் வீட்டிற்கு போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.

Views: - 469

0

0