பேருக்கு தான் மதுரைக்கு 2 அமைச்சர்கள்… ஒன்னும் பயனில்லை ; திமுக குறித்து செல்லூர் ராஜு கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 10:09 pm

மதுரை ; மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் சிறப்பு நிதியோ, சிறப்பு திட்டங்களோ எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்.30ம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.

அவருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகள் குறித்து கழக பொதுக்கூட்டம் இன்று மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது :- 108 டிகிரி சூரியன் சுட்டெரித்தாலும், தமிழகத்தில் சூரியனை அஸ்தமிக்கும் வகையில் மதுரை மாநாட்டை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

30ம் தேதி தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவிக்கிறார். அங்கிருந்து ஈபிஎஸ் பசும்பொன் செல்கிறார். ஜெயலலிதா போல ஆணித்தரமான முடிவெடுத்து கட்சியை சிறப்பாக இபிஎஸ் வழிநடத்துகிறார்.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் சிறப்பு நிதியோ சிறப்பு திட்டங்களோ, எதுவும் செய்யவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா போல சிறந்த முதலமைச்சராக ஈபிஎஸ் செயல்பட்டார். அதிமுக சாதாரண கட்சியல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா போல இபிஎஸ்-க்கு லட்சக்கணக்கான கூட்டம் கூடும், என்றார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?