போதை தரும் மாத்திரைகள் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை : பிரபல மருந்தக உரிமையாளர் கைது

Author: Babu Lakshmanan
5 August 2022, 3:45 pm
Quick Share

மதுரை : மதுரையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதை உணர்வளிக்கும் நரம்பியல் மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த பிரபல மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான ‘மதுரா மெடிக்கல் சென்டர்’ல் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இல்லாமலேயே அல்ப்பிரசோலம் (Alpra zolam) எனப்படும் நரம்பியல் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், அந்த மாத்திரைகளை கொண்டு பள்ளி மாணவர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் போலீசார் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தொடர்ந்து மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதித்த போலீசார் கடையை அடைக்க உத்தரவிட்டதன் பேரில் கடை அடைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தாளுனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 597

0

0