பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்..!
9 September 2020, 1:58 pmபிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லைத்தோப்பு பகுதி மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை மோகன் வழங்கியுள்ளார்.
இதற்காக தனது மகள் நேத்ராவின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் ரூபாயை செலவு செய்தார். இதனிடையே, கடந்த மே மாதம் நடைபெற்ற மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சலூன் கடை உரிமையாளர் மோகனை பாராட்டினார்.
“மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் தனது மகளின் கல்விக்காக ரூ.5 லட்சம் பணம் சேமித்து வைத்திருந்தார். இதனை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டுள்ளார்.
தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இவருக்கு எனது பாராட்டுக்கள்” என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் எல்.முருகன், மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன், மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மோகனை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில்,மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்துள்ளார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மோகன் மற்றும் அவரது மனைவி பாஜகவில் இணைந்து கொண்டனர்.
0
0