இரவு 1 மணிக்கு போன் அழைப்பு.. மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. ஆடு வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவன் கைது

Author: Babu Lakshmanan
1 June 2022, 12:09 pm
Quick Share

சென்னை : சென்னை அருகே இரவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகர் எச்.பிளாக் பகுதியை சேர்ந்தவர் முருகன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். முருகன் ஆட்டு தொட்டியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.

உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக ராஜேஸ்வரி அவரது கணவர் முருகன் உள்ளிட்ட குடும்பத்தினர் மரக்காணம் வரை சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, ராஜேஸ்வரி இரவு ஒரு மணிக்கு யாருக்கோ போன் செய்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவரிடம் இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் முருகன் வீட்டில் இருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து ராஜேஸ்வரியின் வயிறு, தொடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ராஜேஸ்வரி சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 586

1

0