வாட்டி வதைக்கும் வெயில்…அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பு: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!

Author: Rajesh
2 May 2022, 2:10 pm
Quick Share

சென்னை: தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வருகிற 6ம் தேதி வரை தெற்கு தமிழக கடலோர மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மே 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Views: - 713

0

0