கோவை மாநகரை குப்பை மேடு ஆக்காதே… மேயர் நேருக்கு விவாதிக்க தயாரா? அதிமுக கவுன்சிலர்கள் காட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2025, 2:23 pm
கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு இன்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் வந்தனர். அப்போது வாசல் அருகில் “கோவை மாநகரை குப்பை கிடங்கு ஆக்காதே” என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பிரபாகரன் கூறும்போது : கோவை மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க ஆட்சியில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், நீர் நிலைகள் மேம்படுத்தி அழகு படுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டன.
ஆனால் கடந்த 4 ஆண்டு தி.மு.க ஆட்சியில் மாநகராட்சி பகுதியை குப்பையை மேடாக்கும் வேலையைத் தான் செய்கிறார்கள். இதனால் கோவைக்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை. ஏற்கனவே சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் பகுதிகளில் குப்பை கிடங்கு அமைக்க அ.தி.மு.க .எம்.எல்.ஏ – க்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை குப்பை கிடங்கில் திருப்பூரில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டி பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த போவதாக கூறி உள்ளார்கள்.

சென்னையில் இந்தத் திட்டத்தால் வாய்வு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டார்கள். கோவை மாநகரை குப்பை மேடாக்க கூடாது. வெள்ளலூர் குப்பை கிடங்கு விஷயத்தில் மாநகராட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
கோவை மாஸ்டர் பிளாண் திட்டம் பொதுமக்கள் கருத்து கேட்காமல் நிறைவேற்றப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கோவை மாநகரில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறாரா ? இவ்வாறு அவர்கள் கூறினர்.
