மேகதாது அணை குறித்து விவாதிக்க முழு அதிகாரம் உண்டு.. அதிர்ச்சி கொடுத்த காவிரி மேலாண்மை ஆணையம்..!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 9:45 am
Quick Share

மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஹல்தர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மேகதாது அணை தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது குறித்து விவாதிக்க முழு அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு உள்ளது. தமிழ்நாட்டில் காவிரி பாயும் பகுதிகள் எங்களின் அதிகார வரம்புக்குள் உள்ளது. அந்த பகுதிகளில் நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேகதாது அணை விவகாரம் குறித்து சொலிஷ்டர் ஜெனரலிடமிருந்து சட்டரீதியான ஆலோசனை கேட்டு பெற்றுள்ளோம். நாங்கள் சுதந்திரமான அமைப்பு. எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம்.

மேகதாது குறித்து விவாதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லும் தமிழ்நாடு அரசு தான், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு மாதாந்திர நீர் தரப்படுகிறதா என்கிற கேள்விக்கு, மழைப்பொழிவின் அடிப்படையில் தான் மாதாந்திர நீர் பங்கீடு தீர்மானிக்கப்படுகிறது, என பதிலளித்தார்.

இந்த ஆய்வில் திருச்சி மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ராமமூர்த்தி பேசுகையில், “தமிழ்நாடு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் மேட்டூர் அணைக்கு கடந்த மே மாதம் நீர் வந்து சேர்ந்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்ட நீர் கிடையாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இதனை கணக்கில் கொள்ள முடியாது,” என்றார்.

Views: - 560

0

0