தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : சக மாணவர்கள் மற்றும் பள்ளி விடுதி காப்பாளரிடம் சிபிஐ விசாரணை…

Author: kavin kumar
21 February 2022, 4:17 pm
Quick Share

தஞ்சை : திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி பள்ளியில் படித்து வந்த  12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ குழுவினர் இன்று விடுதி மற்றும் பள்ளிக்கு வந்து விசாரணையை தொடக்கி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தார். பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ம் தேதி இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால் மாணவியை மதமாற்றம் செய்ய முயன்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கடந்த ஜனவரி 31ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இருப்பினும் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து சிபிஐ தங்களின் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 15ம் தேதி வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இன்று திருச்சி வழியாக மாணவி லாவண்யா படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு வந்த சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடரந்து மாணவி படித்த தூய இருதய மேல்நிலைபள்ளி மாணவர் விடுதி மற்றும் பள்ளி வளாகத்தை திசை காட்டும் கருவி கொண்டு சிபிஜ அதிகாரிகள் பள்ளியை விடியோ பதிவு செய்தனர். இதன் பின்னர் பள்ளி விடுதி காப்பாளர் சகாயமேரி, பள்ளி தலைமை ஆசிரியர் பிராங்கிளின் மேரி, மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை அதிகாரியான வல்லம் பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார்.

Views: - 610

0

0