ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
5 August 2022, 10:38 am
Quick Share

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் ப்ரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :- பொதுவாகவே நாம் மட்டும் இல்லை, உலகமே நீதிமன்றம் நீதித்துறை நம்பி தான் உள்ளது. அனைவரது நம்பிக்கையும் நீதிமன்றம் கொடுக்கக்கூடிய, அந்த நல்ல தீர்ப்பு தான். அந்த வகையில் இன்றைக்கு அந்த துறையை தேர்ந்தெடுத்து பட்டம் பெற்று செல்லும் நம்முடைய இந்த மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கின்ற வகையிலே இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

மேலும் அரசுத்துறை சார்பாக தமிழக முதல்வர் புதிதாக சட்டக் கல்லூரி மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் ஆறு மாவட்டங்களில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான ஆங்கில புலமை, அந்த திறமையை மேம்படுத்துவதற்காக தனியாக ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் போன்ற மாணவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது, எனக் கூறினார்.

ஆரம்ப பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா..? என்ற கேள்விக்கு, இது நலத்துறை சார்பானது என்றாலும், இதனால் பள்ளி மாணவர்கள் தான் பயன் அடையப் போகின்றனர். எப்போது ஆரம்பிக்கும் என்பதை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.

Views: - 536

0

0