ஒப்பந்ததாரர்களை நம்ப மாட்டேன்.. இனி நேரில் ஆய்வு செய்வேன்.. அதுக்கு அப்பறம் தான் பேமென்ட் ; அமைச்சர் துரைமுருகன் கறார்..!!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 2:32 pm
Quick Share

வேலூர் ; தமிழகத்தில் நீர்நிலைகளை மாசுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் ஏரிகள், தடுப்பனைகள புனரமைப்பு மற்றும் ஏரிகளை சுற்றுலா தளமாக மாற்றுதல் உள்ளிட்ட 8 பணிகளுக்கு 139 கோடியே 21 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- வேலூர் அருகே உள்ள சதுப்பேரி,
ஏரி சுற்றுலா தளமாக மாற்றவும் அணைக்கட்டு அருகே கீழ்அரசம்பட்டு பகுதியில் அணை கட்டப்படவும் வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் ஏரி மற்றும் காட்பாடி ஏரி ஆகிய ஏரிகள் வீராணம் ஏரி போன்று, சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால், அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் வரும் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிஞ்சூர் ஏரியில் படகு சவாரி, பார்வை தளம் வெளிநாட்டு பறவைகள் கொண்டுவர நடவடிக்கை, ஏரியின் நடுவில் செயற்கை தீவு போல அமைத்து, அதில் மரங்களை நடுதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் மற்றும் தரைப் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விரைவில் இப்பணிகள் துவக்கப்படும். குடியாத்தம் அருகே கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட பத்தலபல்லி அணை மீண்டும் கட்ட, வரும் நிதி ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நீர்வளத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் சரியாக செய்ய வேண்டும். தானே நேரில் சென்று பார்வையிட்ட பிறகுதான் அந்த பணிகளுக்கான தொகையினை அதிகாரிகள் வழங்க வேண்டும். வேலூர் மாவட்டம் பொன்னை அருகே தனியார் தொழிற்சாலை ஒன்று பாலாற்றங்கரையில் மலை போல் குப்பைகளை குவித்து வருவதால், அந்த நிறுவனத்தினர் உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலாறு மற்றும் ஏரிகளில் குப்பைகளை கொட்டாமல் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Views: - 861

0

0