டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மாநாடு : மு.க.ஸ்டாலின் ட்வீட்

Author: kavin kumar
13 February 2022, 9:04 pm
MKSTALIN-UPDATENEWS360
Quick Share

டெல்லியில் எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக அந்த மாநில ஆளுநர் நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநில ஆளுநரின் செயலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மம்தா வருத்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க மம்தா யோசனையளித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பிறப்பித்த உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக மாநில ஆளுநர் ஜகதீஷ் தங்கர் விளக்கம் அளித்திருந்தார்.

Views: - 823

0

0