வயிறு வலி என குழந்தை கொடுத்து விட்டு சென்ற தாய்… நீண்ட நேரமாக காத்திருந்த பெண் பயணி ; இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 8:27 pm

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தையை பயணியிடம் கொடுத்து தப்பிச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் கேண்டீன் நடத்தி வருபவர் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள். இவர் இன்று காலை தனது சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அருகில் நின்றிருந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றிருந்துள்ளார்.

அந்தப் பெண் சிறிது தயக்கத்துடன் வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். அருகில் உள்ள பாத்ரூம் சென்று வருவதாக தெரிவித்து தன் வைத்திருந்த குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி செல்லம்மாளிடம் கொடுத்துச் சென்றுள்ளார்.

போன பெண் திரும்பி வரவே இல்லை. காலை 8:30 மணிக்கு குழந்தையை வாங்கிய செல்லம்மாள் 11:30 வரை மணி வரை பார்த்துள்ளார். தனது ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்தும் வந்து சென்று கொண்டிருப்பதால் செய்வதறியாமல் அதே இடத்தில் காத்திருந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அவர் பேருந்து நிலையத்தில் உள்ள தெற்கு புற காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. மேலும், அங்குள்ள சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பின்னர் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸில் வந்த பெண் செவிலியர் மற்றும் செல்லம்மாள், பெண் காவலர் அனைவரும் குழந்தைக்கு முத்தமிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • supreme court told that put case on who ever try to stop the release of thug life movie தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி