’10 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு அலையுறோம்’: ஊசி பாசி பின்னியபடி மனு அளித்த நரிக்குறவர் காலனி பொதுமக்கள்..!!

Author: Rajesh
21 March 2022, 4:16 pm
Quick Share

கோவை: கோவை துடியலூர் புது முத்துநகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊசி பாசி பின்னியபடி வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 65 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து தருகிறோம். இங்கு மின் இணைப்பு கேட்டு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு மின் இணைப்பு தர வில்லை.

மேலும் அ.தி.மு க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகர் எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்று துடியலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மின் இணைப்பு பெற தடையின்மை சான்றிதழ் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தோம்.

ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மின்விளக்கு வசதி இல்லாததால் எங்கள் பகுதி மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே நரிக்குறவர் இன மக்களை வஞ்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 643

0

0