என் மகனை கொ*** மாதிரி.. அவரது மகளையும்… கண்ணீரே வந்திருக்காது : நெல்லை கவின் தந்தை ஆதங்கம்..!!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2025, 4:37 pm
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரைச் சேர்ந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகன் சுர்ஜித் (24), தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்த இளம்பெண்ணின் காதலன் கவின்குமாரை (26) அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்களது மகள், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரின் மகன் கவின்குமாருடன் காதலித்து வந்தார். சென்னையில் சாப்ட்வேர் பொறியாளராகப் பணிபுரிந்த கவின்குமார், சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியிருந்தார்.
அவர் அடிக்கடி பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
சிகிச்சை முடிந்து வெளியே வந்த கவினை, சுர்ஜித் பேச அழைத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளி சுர்ஜித் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கவினின் உறவினர்கள், திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் முக்கானணி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

கவினின் தந்தை சந்திரசேகர் அளித்த பேட்டியில், “எனது மகனைக் கொலை செய்தது போல, அவர்கள் மகளையும் கொலை செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் நான் பாராட்டியிருப்பேன். ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே குற்றவாளிகளைப் பிடித்திருக்கலாம்.
ஆனால், எங்களை மட்டும் இரவு நேரத்தில் வீடு புகுந்து தூக்கிச் செல்கிறார்கள். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண திருமாவளவன் நாளை மறுநாள் வருகிறார். இந்த விவகாரம் பாராளுமன்றம் வரை எடுத்துச் செல்லப்படும்,” என்று கூறினார்.
