‘நிவர்’ புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும்: சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல்…!!
23 November 2020, 5:24 pmசென்னை: ‘நிவர்’ புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளை மறுநாள் நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்.
டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
0
0