பாம்பன் ரயில் பாலத்திற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு… கோவில், கடற்கரையில் போலீசார் குவிப்பு : ராமேஸ்வரத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
24 January 2023, 4:28 pm
Quick Share

குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி நாட்டின் 78வது குடியரசு தின விழா கொண்டாப்பட உள்ளது. இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுதல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராமேஸ்வரம் இராமநாதசாமி கோயில், பாம்பன் ரயில் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும், கடல் பகுதியிலும் மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.

அதே போல, அன்னிய நபர்கள் பாம்பன் ரயில் பாலத்தில் பொதுமக்கள், மீனவர்கள் வருகை குறித்தும் கண்காணித்து வருகின்றனர். பாம்பன் சாலைப்பாலம், ரயில் நிலையம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம், அக்னிதீர்த்த கடற்கரை போன்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராமநாதசுவாமி கோயிலில் வழக்கமாக பணியில் இருக்கும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடலோர பகுதியிலும் புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில், பேருந்து நிலையம் போன்றவற்றில் சந்தேகப்படும் வகையில் பொருட்கள் கிடந்தாலும், கடல் மற்றும் கடற்கரையில் சந்தேகப்படும் வகையில் அன்னிய படகுகள், அந்நியர்களை பார்த்தாலும் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 262

0

0