அமைதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி : டிஜிபி சைலேந்திர பாபு…

Author: kavin kumar
19 February 2022, 10:13 pm

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (19.02.2022) அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அமைதியாக நடைபெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் வாக்கு வாதம், சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்சனைகள் நடைபெற்ற போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டினர். பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலும், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாலும் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. நடந்த சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடம் இருந்து சமூக வலைதளங்களின் மூலமாகவும் காவல் தொலைபேசி எண்கள் மூலமாகவும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டி உள்ளனர். காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கு காவல்துறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மின்ணணு வாக்குப் பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைக்கும் வரை காவல் கண்காணிப்பு மற்றும் காவல் ரோந்துப்பணியும், பின் வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!