ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ரகளை.. தட்டிக் கேட்ட மக்கள் மீது கொடூர தாக்குதல்!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2025, 6:59 pm
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி ஏ.டி காலணியில் காளியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று இரவு கோவில் அருகே உள்ள நாடக மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்க: மீண்டும் ஓசி சர்ச்சை.. எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும், திமிரும்.. அண்ணாமலை கண்டனம்!
ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்க்க அம்மாபட்டி மற்றும் கொடிக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிராம மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கிராம மக்களை இளைஞர்கள் தகாத வார்த்தையால் பேசியதால் கிராம மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேடசந்தூர் போலீசார் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு மீண்டும் பூத்தாம்பட்டி சென்று அங்கு இருந்த கிராம மக்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு இருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதில் பூத்தாம்பட்டியை சேர்ந்த பாண்டியன், வேல்முருகன், ரத்தீஷ்வர்மா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த வேல்முருகன் மற்றும் முத்துச்சாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் அசம்பாவீதம் ஏற்படாமல் தடுக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் இளைஞர்கள் ஊர் மக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.