காவல் மரணங்களை ஏற்க முடியாது… உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? கோர்ட் சரமாரிக் கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2025, 11:57 am
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற மூதாட்டி தனது பேத்தி நிகிதாவுடன் காரில் வந்துள்ளார்.
அப்போது கோயில் தற்காலிக ஊழியர் அஜித்திடம் கார் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
இதையும் படியுங்க: எல் முருகன்-ஏ ஆர் ரஹ்மான் திடீர் சந்திப்புக்கு இதுதான் காரணமா? ஓஹோ!
இதனை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் தற்காலிக ஊழியர் அஜித்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அஜித் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில் போலீசார் விசாரணைக்காக வேனில் அஜீத் உட்பட 5 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அஜித் உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து மடப்புரம் மற்றும் திருபுவனத்தைச் சேர்ந்த அஜித்தின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் குவிந்தனர்.
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ்ராவத் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உறவினர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அஜித் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.

இதனால் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காவல்துறை தாக்கியதால் தான் அஜித் உயிரிழந்ததாக புகார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, காவல்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் போலீசார் தாக்கியது ஏன் என தெரியவில்லை?
உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினாரா? சட்டவிரோத காவல் மரணங்களை ஒரு போதும் ஏற்க முடியாது
கடந்த 4 வருடங்களில் காவல் நிலையத்தில் 24 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
