வீட்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 12:37 pm
Quick Share

புதுச்சேரியில் வீட்டிற்குள் வந்த் பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அக்குடும்பத்தினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி ரோஜா நகரில் ரமணி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அரசு ஊழியர்களான இவர்கள், வெளிநாட்டு ரகம் நாய்களான ராட் வில்லர் வகையை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரமணி, அதனை அங்குள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் நாய் சோர்வுடனே காணப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரமணி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு செத்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, தனது வீட்டுக்குள் வந்த பாம்பிடம் அவரது இரண்டு வளர்ப்பு நாயும் சண்டையிடுவதும், அதில் மிஸ்டி பாம்பை வாயில் கவ்வி கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து, தனது நாய் பாம்பை கடித்து கொன்றதால் தான் சோர்வாக காணப்படுகிறது என்று எண்ணிய அவர், உடனடியாக மிஸ்டியை புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். தற்போது மிஸ்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாய்களும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டுற்குள் செல்ல இருந்த பாம்பிடம் போராடி அதனை கடித்து கொன்ற நிகழ்வு ரமணி குடும்பத்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 993

0

0