நலம் விசாரிப்பா? தேர்தல் கூட்டணியா? முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா : அரசியலில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2025, 11:36 am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறியதையடுத்து கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் உடனிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தற்போது வரை எந்தவொரு கூட்டணியிலும் இணையாத தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியை நோக்கி நகர்வதற்கு இந்த சந்திப்பு அச்சாரமாக இருக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு வெறும் உடல்நல விசாரிப்பா அல்லது எதிர்கால அரசியல் உத்திகளை வகுப்பதற்கான பேச்சுவார்த்தையா என்பது குறித்து தமிழக அரசியல் களத்தில் தீவிர விவாதங்கள் நடைபெறுகின்றன.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலத்துடன் மீண்டு, தனது அரசியல் பணிகளை விரைவில் தொடருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், இதுபோன்ற சந்திப்புகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
